Monday 19 March 2012

பைரவர்



தாடிக்கொம்பு பைரவர்




Add caption




நம்வீட்டுப்பெண்களுக்கு தங்கநகையிட்டு திருமணம் செய்து கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. விலை உயர்ந்துள்ள இந்த நேரத்தில் பெற்றவர்களின் கஷ்டத்தை தீர்த்து, நகை அருள்பவராக விளங்குகிறார் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள சுவர்ண ஆகர்ஷண பைரவர்.

தல வரலாறு: "மண்டூகம்' என்றால் "தவளை'. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் "மண்டூக மகரிஷி' என பெயர் பெற்றார். சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்தார். அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக்காக்கும்படி, மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி அசுரனை அழித்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் எழுந்தருளி, "சவுந்தரராஜர்' என்னும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோவிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 


500 வருடங்களுக்கு முன்பு விஜயநகர ஆட்சி வழி வந்த அச்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்: பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் சிற்பங்கள் இருக்கின்றன.


பிரார்த்தனை: பெண்களுக்கு நகை போட முடியாமல் திருமணத்தடை ஏற்படுவது சகஜமாக உள்ளது. இந்தப் பெண்கள் தங்கள் பெற்றோருடன், இங்குள்ள சுவர்ண ஆகர்ஷண பைரவரை வணங்குகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் இங்குள்ள கார்த்த வீரியார்ஜூனருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். வியாழன் தோறும் ஆண்டாள் எழுந்தருளுகிறாள். திருமணத் தடையுள்ளவர்கள் இவளுக்கு மஞ்சள்பொடி அபிஷேகம் செய்தும், மன்மதன், ரதி சிற்பங்களுக்கு மணமாலை அணிவித்தும் வேண்டி கொள்கிறார்கள். வெளிநாட்டு வரன் வேண்டிக்கொண்டால் கூட, தகுந்த வரன் அமைவதாக பக்தர்கள் அதிசயித்து கூறுகின்றனர்.


கல்வி வழிபாடு: இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் காட்சியளிக்கின்றனர். திருவோண நட்சத்திர நாட்களில், ஹயக்ரீவருக்கு தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கு தனி சந்நிதி உள்ளது. 



இவருக்கு அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம் செய்யப்படுகிறது. மூலிகை லேகியம் படைத்து பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷமானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சந்நிதி உண்டு.

பெருமாள் கோயிலாக இருந்தாலும், இங்கு வில்வமரம் தலவிருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமிக்கு வில்வஇலைகள் பிரியமானவை. வில்வம் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். தாயார் சவுந்தரவல்லி சந்நிதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக்கூடமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்ட நாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் சிற்பங்கள் உள்ளன.


திருவோண தீபம்: மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின்போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம், பாவனையாக நடக்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர். 


திருவிழா : சித்திரைத் திருவிழா, ஆடிப் பவுர்ணமி விழா.
திறக்கும் நேரம் : காலை 7-12, மாலை 4 - இரவு 8. 
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் ரோட்டில் 9 கி.மீ.,
போன் : 97905 42568, 94865 01122, 0451-255 7232. 
நன்றி தினமலர்






No comments: