Friday 25 May 2012

தென்குடித்திட்டை (திட்டை)






இறைவர் திருப்பெயர்
வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், 
தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர், 
அனந்தேஸ்வரர், நாகேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்
உலகநாயகிமங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.

தல மரம் : சண்பகம். (தற்போதில்லை.)

தீர்த்தம் : சூல தீர்த்தம்.  (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்)

வழிபட்டோர் : வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால்,                               காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர்.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - முன்னைநான் மறையவை.

தல வரலாறு

காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

சிறப்புக்கள்

இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷ¤ண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

(இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்ட்டுள்து.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
கும்பகோணம் - திருக்கருக்காவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.